தமிழ்த் திரைமொழியை,
நீ
ஆழ அகல உழுதபின்தான்
செம்மண் காடுகளில்கூட
சந்தன மரங்கள் வளர்ந்தன.
பாம்படக் கிழவிகளின்
பல்லில்லா வாய்மொழியில்
பகடிகள் கேட்டன.
கஞ்சிக் கலயங்களில்
கசிந்த காதலைப்
பெருநகரங்கள்
அண்ணாந்து பார்த்தன.
கையறுநிலையில் வாழும்
தந்தையின்
குருதி வெப்பத்தைத்
தமிழ்நிலம் உணர்ந்தது.
முன்னேர் ஓட்டுவதற்குப்
பெருமுனைப்பு வேண்டும்.
ஊட்டி மலைகளில்
ஓடியாடிய
மேட்டுக் காதலை
ஆண்டிப்பட்டிச் சாலைகளில்
அழைத்துவர
பேராற்றல் வேண்டும்.
வண்ணக் கனவாய்
வளைய வந்தத் திரைப்படத்தை
மண்ணின் அழுக்கோடு
மடியில் இருத்திவைக்க
மனம் நிறைந்த துணிவு வேண்டும்.
அத்தனையும் பெற்றவன் நீ.
நிலவின் அருகிருந்தப்
பெருங்கனவைத்
தலையணைக்கு அருகில்வைத்துத்
தட்டி எழுப்பியவன் நீ.
இன்று காணும்
நல்ல திரைப் பூக்கள் பலவும்
வேலிகளற்ற உன் தோட்டத்தின்
விளைச்சல்களே.
அந்தத்
தமிழ்த் திரை நிலத்தில்
அடியுரமாய்க் கலந்துவிட்டாய்.
அழியாப் பெருவாழ்வு
உனக்கு.
போய்வா ...
கண்ணீர் வணக்கம் 🙏
10-06-2026
No comments:
Post a Comment
தங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்